Saturday, November 15, 2008

பெருமிதமாம்! - கலைஞர் கவிதை

பெருமிதமாம்! - கலைஞர் கவிதை


வான் முகத்தில் நகக்குறி போல் இருக்கின்ற நிலாப் பெண்ணின்
தேன் கிண்ண இதழ்களிலே முத்தமிட்டு - இந்திய நாட்டுத்


தேசியக் கொடிதனையும் கையில் கொடுத்து விட்டுத்
திரும்பிவரும் திறமை மிகு விஞ்ஞானத்தின் கரம் குலுக்கி வாழ்த்துகின்றோம்.


புராணத்தில் வரும் சந்திரனோ; குருவின் மனைவி தாரைக்கு;
புதியதோர் காதலன் என்று புராணமே கூறி வணங்கும்!


பாம்புகள் இரண்டு ராகுவும் கேதுவும் சந்திரனை விழுங்குமாம்;
பஞ்சாங்கம் அதனை ''கிரகணம்'' என விளம்புமாம்!


அனைத்தும் பொய், புளுகு, கற்பனையெனத் தூக்கி அடித்து;
அமெரிக்க, ரஷ்ய, அய்ரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின்


அணி வகுப்பில் இணைந்து அருஞ்சாதனை புரிந்து விஞ்ஞானம்;
அசோக சக்கரக் கொடியை அம்புலியில் நாட்டியது;


அறிவியக்க வரலாற்றில் ஓர் அற்புதமாம்;
அதுவும் நம் நாட்டில் என்பதிலோர் பெருமிதமாம்!

 

                                    - கலைஞர்